பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
12:07
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள ஜூகூர் கிராமத்தில், பாகுபலி படத்தில் வரும் காட்சி போல், ஒரே சமயத்தில், மூன்று அம்புகளை விடும் வீரரின், இரு நடுகற்களை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த ஜூகூர் கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, மிகவும் அபூர்வமான, ஒரே சமயத்தில், மூன்று அம்புகளை விடும் போர் வீரனின், இரு நடுகற்களை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: ஜூகூர் கிராமத்தில், மொத்தம், மூன்று நடுகல் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ளன. முதல் நடுகல்லில் உள்ள வீரன், வலது கையில், மூன்று அம்புகளை பிடித்திருக்கிறான். இடது கையில் வில் வைத்திருக்கிறான். கழுத்து முதல் மார்பு வரை ஆபரணங்கள் அணிந்திருக்கிறான். இடையில் ஆடையும், இடதுபுறம் சாய்ந்த கொண்டையும் அமையும் படி, சிற்பம் வடிவமமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடுகல்லில் உள்ள வீரனின் வலது கையில், மூன்று அம்புகளும், இடது கையில் வில்லும் உள்ளன. இந்த வீரன் எதிர்கொண்ட மற்றொரு வீரனின் சிற்பம், மிகவும் சிறியதாக வலதுபுறம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய சிற்பத்தின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயம் போன்ற ஆயுதமும் உள்ளன. இடது கையில் வைத்திருக்கும் கேடயத்தை வைத்து பார்க்கும் போது, கங்கர்களின் போர் வீரனாக இருந்திருக்கலாம். இந்த, இரு நடுக்கல்லிலும் உள்ள வீரர்கள், வில்வித்தையில் மிக சிறந்த வீரர்களாக இருந்திருக்க வேண்டும். பாகுபலி படத்தில் வரும் காட்சி போல், ஒரே சமயத்தில், மூன்று அம்புகளை விடும் அளவிற்கு கைதேர்ந்தவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் வில் மூலமாகவோ அல்லது வேல் மூலமாகவோ இறந்திருக்க வேண்டும். இந்த, இரு நடுகல் அருகே உள்ள மற்றொரு நடுகல்லில், வீரனின் வலது கையில் மேல் நோக்கிய வாள், இடது கையில் தாமரை மொட்டு போன்ற பொருள், இடையில் குறுவாள், மார்பு முழுவதும் ஆபரணங்கள், இடையில் நீளமாக தொங்கும் ஆடை, மேல்பகுதியில் சந்திரன், சூரியன் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.