பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
01:07
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார். அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜை நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது.
படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள்முன்பு மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. இரவு சிம்மாசனத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.
கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவருக்கு வளையல்கள் அணிவித்து, பூஜைகள் முடிந்து ஐந்து வகை சாதம் படைக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்து வளையல்அணிவித்து, லலிதா சகஸ்ர நாமம் பாடப்பட்டது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் மூலவர் விசாலாட்சி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, கலவை சாதம் படைத்து, லலிதா சகஸ்ர நாமம், கும்மி பாட்டு பாடப்பட்டு, பக்தர்களுக்கு வளையல் கொடுக்கப்பட்டது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி வளையல் அணிவிக்கப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார்.