பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
திருநெல்வேலி:பாளை., தூய சவேரியார் பேராலயத் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.பாளை.,தூய சவேரியார் பேராலய பெரு விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலயத்தில் பாளை., முதன்மை குரு ஜோமிக்ஸ் திருப்பலி நிகழ்த்தினார். தூத்துக்குடி தூய பனிமய அன்னை ஆலய அதிபர் வில்லியம் சந்தானம் மறையுரை ஆற்றினர். இதனையடுத்து ஆலயத்தில் இருந்து வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்ட தூயசவேரியார் உருவம் பதித்த கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாளை., சவேரியார் சர்ச் பங்குதந்தை அந்தோணிராஜ், உதவி பங்குதந்தையர்கள் பிரிட்டோ, சுரேஷ்குமார், நெல்லை சமூக சேவை இயக்குனர் கென்னடி, உதவி இயக்குனர் ஜாண்சன், பாளை., சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலய அதிபர் ராஜேஷ், அருட்தந்தையர்கள் ஜெகன், செல்வன், சலேத், அன்டோ, ஜெயஜோதி, "நம் வாழ்வு துணை ஆசிரியர் ராஜா மற்றும் மறை மாவட்ட மற்றும் பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தின் போது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கு மக்கள், பாளை., மறைமாவட்ட மக்கள், பாரத மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 3ம்தேதி வரை காலை மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், மாலையில் மறையுரை, கலை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.நாளை(26ம்தேதி) இரவு 8 மணிக்கு பொது அசன விருந்தும், 27ம்தேதி மாலை 6மணிக்கு ஒப்புரவு அருட்சாதனமும், வரும் டிசம்பர் 2ம்தேதி மாலை வழிபாடு, பாதுகாவலரின் திருவுருவப்பவனியும் நடக்கிறது. 3ம்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, புதுநன்மை விழாவும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், கலை விருந்தும், 4ம்தேதி உறுதி பூசுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை பாளை., மறைமாவட்ட பேராலய குழுவினர் செய்து வருகின்றனர்.