பதிவு செய்த நாள்
25
நவ
2011
10:11
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களிடம் பணம் மற்றும் நகைகளை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து வரு கின்றனர். கொள்ளை குறித்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தாலும் கொள்ளையர்களை பிடிப் பதிலும், பக்தர்களுக்கு பாது காப்பு கொடுப்பதிலும் போலீசார் மெத்தனமாக செயல் படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திருச்செந்தூர் கோயில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற இரண்டாம் படை வீடாகும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை பயன்படுத்திய கொள்ளை கும்பலும் திருச்செந்தூரில் வந்து முகாமிட்டு கொள்ளை நடத்தி வருகின்றன.
கொள்ளையர்கள் கடற்கரையில் நின்று குளிக்க செல்லும் பக்தர்களின் உடமைகளையும், பஸ்ஸ்டாண்ட் மற்றும் கோயில் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் கண்ணாடிகளையும் உடைத்து பொருட்களையும், பணத்தினையும் கொள்ளையடித்து செல்கின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் குவிந்துள்ள புகார்கள் விபரம், தூத்துக்குடி பாரதிநகரை சேர்ந்த சுப்பாநாயக்கர்(65). இவர் தனது குடும்பத்தினருடன் முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். கடலில் குளிப்பதற்காக சென்ற சுப்பாநாயக்கரின் குடும்பத்தினர் 5 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க செயின்கள், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து அவரது சகோதரனிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றபோது மர்மநபர்கள் அவரது கவனத்தை திசைதிருப்பி நகை பையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சுப்பாநாயக்கர் கொடுத்த புகாரினை சப்இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இதேபோல் காரைக்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(53). இவர் தனது மனைவி தனலட்சுமி(45)யுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.
இவர் வந்த காரினை நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவர்களது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்து காரின் உள்ளே பார்த்தபோது காரின் உள்ளே வைத்திருந்த ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்தையும், செல்போனையும் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோயில் சப்இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். விருதுநகர் சூளைக்கார மேடு பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(45). இவர் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். இவர்கள் தங்கள் உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் குளித்து கொண்டிருந்த போது கரையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் தங்கநகை, செல்போன், கேமரா ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதேபோல் நேற்றும் தொடர் சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த நடராஜன் மகன் தண்டபாணி(42). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு காரில் சாமி கும்பிட வந்துள்ளார். நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்டில் இவர் தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தாருடன் சாமி கும்பிட சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது இவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.32 ஆயிரம் ரொக்கம், ஐந்து செல்போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து இவர் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதேபோல் நேற்று சேலத்தைச் சேர்ந்த விஜயகுமார்(39). தனது குடும்பத்தாருடன் சாமி கும்பிட வந்துள்ளார். இவர் தனது காரினை கோயில் கலையரங்கம் அருகில் நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்று விட்டார். பின்பு வந்து பார்த்த போது இவரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கொள்ளை நடப்பதால் பக்தர்கள் மத்தியில் கடுமையான பீதி நிலவி வருகின்றது. மேலும் இந்த மாதம் முதல் வருகின்ற ஜனவரி மாதம் வரை பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும் போது தனது குடும்பத்தாரிடம் உடைமைகளை கொடுத்து குளிக்க செல்வதும், தங்களது காரின் உள்ளேயே பூட்டி செல்வதும் வழக்கம். இதனை மோப்பம்பிடித்த கொள்ளையர்கள் துணிகரமாக இந்த தொடர் கொள்ளைகளை செய்து வருகின்றனர். இது போலீசாரின் அலட்சியமான போக்கு என்று பக்தர்கள் பேசிக் கொள்கின்றனர். போலீசார் உடனடியாக அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பு பணியினை பலப்படுத்தினால் மட்டுமே இந்த திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.