பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஆடி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, மூலவருக்கு, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, மூலவர் அம்மனுக்கு காலையில், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார், புச்சிரெட்டிப்பள்ளி, பொன்பாடி உட்பட அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல், ஆடி மாதத்தையொட்டி, அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.