பதிவு செய்த நாள்
04
ஆக
2017
12:08
பவானி: ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை காவிரி ஆற்றில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தனிச் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி, 1, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என, கோவில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதில், ஆடி, 18, ஆடிப்பெருக்காக ஆற்றங்கரை கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று பக்தர்கள் ஆற்றில் நீராடி, சுவாமியை வணங்குவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு நாளான நேற்று, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்த வண்ணம் இருந்தனர். காவிரி, பவானி, அமுத நதி கூடும் இடமான கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு, கன்னிமார் பூஜை செய்தனர். புதுமணத் தம்பதியினர், திருமண மாலைகளையும், பூஜை செய்த முளைப்பாரியையும் காவிரி ஆற்றில் விட்டனர். புது மஞ்சள் கயிறு மாற்றினர். பின், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளின் சன்னதிகளில் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பவானி டி.எஸ்.பி., ஜானகிராம் தலைமையில், புறக்காவல் நிலையம் அமைத்து, ஏராளமான போலீசார், ஊர்க் காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்கள் அபாயகரமான ஆற்றுப் பகுதிக்கு செல்லாமல் இருக்கும் வகையில், போலீசார் பல இடங்களில் சிவப்புநிற கொடி கட்டி, எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். இதனால், பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தவிர்த்தனர்.