பதிவு செய்த நாள்
04
ஆக
2017
12:08
நாமக்கல்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், ஆடிப்பெருக்கு விழாவை, ஏராளமான மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டத்தில், காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்ட்டது. இதை முன்னிட்டு, மேட்டூர் அணையில் இருந்து, 2,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள், நேற்று அதிகாலை முதல், ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். ஏராளமான பெண்கள் கருகமணி வைத்து, கன்னிமார் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாலை, ஆற்றில் நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடந்தது.
* ப.வேலூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையில், பக்தர்கள் புனித நீராடி தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபட்டனர். ப.வேலூர், காவிரி ஆற்றில், மாலை, 6:00 மணியளவில், காவிரியில் மோட்ச தீபம் விடும் நிகழ்வு நடந்தது. வாழை மட்டையால் அலங்கரிக்கப்பட்ட மோட்ச தீபத்தை, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின், பரிசலில் வைத்து ஆற்றின் மையப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, விடப்பட்டது.
* பள்ளிபாளையம், காவிரி ஆற்றில் ஆகாயாத்தாமரை வளர்ந்துள்ளதால், பொதுமக்கள் பலரும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
* நாமகிரிப்பேட்டை அடுத்த, கொங்களம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நாமகிரிப்பேட்டையில் இருந்து கொங்களம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
* குமாரபாளையம், காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு, 1,008 தீர்த்தக்குட அபிஷேகம் நடந்தது. மக்கள் காவிரி ஆற்றில் நீராடி, கன்னிமார் சுவாமி, காவிரி அன்னை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நுழைவு கட்டணம் வசூலால் அதிர்ச்சி: மோகனூர், காவிரி ஆற்றுக்கு வாகனங்களில் வந்த பக்தர்களை குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பே நிறுத்தி, இரு சக்கர வாகனத்துக்கு, 10 ரூபாய், கார், சரக்கு ஆட்டோவுக்கு, 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. அதற்கு, துண்டு சீட்டு ரசீதும் வழங்கப்பட்டது. ஆனால், நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு எவ்வித டெண்டரும் விடப்படாததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் சாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, அவர் எடுக்கவில்லை. கோவில் பணியாளர் ஒருவர் கூறும்போது, ஆண்டு தோறும் தனி நபர் ஒருவர், கோவிலுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, கட்டணம் வசூல் செய்து கொள்வது வழக்கம், என்றார். ஆனால், கோவில் சார்பில், குழு ஏதும் அமைக்கப்படாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.