பதிவு செய்த நாள்
05
ஆக
2017
02:08
* பொள்ளாச்சி: மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி சிறப்பு பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அம்மன் வழிபாடுக்கு பின், பக்தர்களுக்கு ராகிக் கூழ், மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில், முளைப்பாரி விழா நடந்தது. விழாவையொட்டி, ஆடி 9ம் நாள், பெண்கள், வீடு, வீடாகச்சென்று, பயிறுகள் வாங்கி, முளைப்பாரி வைத்தனர். ஒன்பது நாட்கள் குலவை தண்ணீர் கொண்டு வந்து, தண்டு மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். பின், முளைப்பாரியை, நால்வர் மடாலயத்திலிருந்து, ஊர்வலமாக, தண்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்ற பெண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்தினர். அம்மணீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜைகள் நடத்தி, முளைப்பாரியை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகை சிறப்பு அபிஷேகம், ஒன்பது வகை மலர்களால் அலங்கார வழிபாடு நடந்தது. விழாவில், பங்கேற்ற பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய கயிறு, வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன.
* ஆனைமலை
மாசாணியம்மன் கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் வீரமாத்தியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை தரிசித்தனர்.சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
* வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது.அண்ணாநகர் முத்துமாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன்கோவில், சின்கோனா சக்திமாரியம்மன் கோவில், கலைஞர்நகர் மாரியம்மன் கோவில், நடுமலை மாரியம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
* உடுமலை
ஆடி மாத வரலட்சுமி விரதத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் இம்மாதத்தில் நடக்கிறது. அதில் வரும் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில், பக்தர்கள் பல வேண்டுதல்களை முன்வைத்து, கம்பு, ராகி உள்ளிட்ட தானியங்களில் கூழ் படைத்து, சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பலம் பெறவும், குழந்தை வரம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், இந்நாளன்று சிறப்பு பூஜைகளை மேற்கொள்கின்றனர்.
வீடுகளில், அஷ்ட லட்சுமிகளை அழைக்கும் வகையில், மாக்கோலமிட்டு, கலசத்தில் அம்மன் உருவத்தை வடிவமைத்து, தாமரை மலர் தூவி பூஜைகளை நடத்தினர். கோவில்களில், சுமங்கலி பெண்கள், தாலிச்சரடு மற்றும் வளையல், மஞ்சள் குங்குமம், உள்ளிட்ட பொருட்களை பக்தர்களுக்கு வழங்கினர்.
உடுமலை, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, காலை, 6:00 மணி முதல் சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள், விளக்கு போடுவதும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் வழிபட்டனர். மாலை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
* லட்சார்ச்சனை
வரலட்சுமி விரதத்தையொட்டி, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், காலை, 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கோ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.
தளி ரோடு, காமாட்சி அம்மன் கோவிலில், காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கலசத்தில் அம்மனை அலங்கரித்து, வழிபட்டனர். சுமங்கலிப் பெண்கள், அம்மன் துதி பாடல்களை பாடி பஜனை செய்தனர்.
குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆண்டாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சமேதமாக, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அருகில், சுயம்புவாக அவதரித்துள்ள பூமிலட்சுமி அம்மன் கோவிலில், ஆடிவெள்ளியையொட்டி, அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவிலில், மாலை, அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது.
ஆடி வெள்ளியில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வரும் அம்மனின் அருள் வேண்டி, சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.