ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் பழமையான அம்மன் சிலை ஒதுங்கி உள்ளது. அதை இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சித்தனரா என போலீசார் விசாரிக்கின்றனர். மண்டபம் தோணித்துறை கடற்கரையில் 3 அடி உயரத்தில், கருங்கல்லில் வடிவமைத்த அம்மன் சிலை ஒதுங்கி கிடந்தது. 50 ஆண்டுகள் பழமையான இந்த அம்மன் சிலையில் 4 கைகள் உள்ளதால், கிராம கோயிலில் உள்ள சிலையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சிலை கடத்தல்: இப்பகுதியில் இருந்து அம்மன் சிலையை திருடிய கடத்தல்காரர்கள், மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முடிவு செய்து, மண்டபம் கடற்கரையில் இருந்து கள்ளபடகில் சிலையை கடத்தி சென்ற போது, அவ்வழியாக ரோந்து வந்த இந்திய கடலோர காவல் படை கப்பல் வீரர்களை கண்டதும், சிலையை கடற்கரையில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இச்சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.