பதிவு செய்த நாள்
13
செப்
2017
12:09
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆயுத பூஜை பொரி தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. செப்., 29ல், இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. மக்கள், தொழில் நிறுவன இயந்திரங்ளையும், வாகனங்களையும் பூஜை செய்து வழிபடுவர். அதில், முக்கிய படையலாக பொரி இருக்கும். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பொரி தயாரிப்பு தீவிரமாக நடக்கிறது.
இதுகுறித்து, குமாரபாளையத்தை சேர்ந்த பொரி உற்பத்தியாளர் நாகப்பன் கூறியதாவது: கோல்கட்டா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் விளையும் ஜே.64 வகை அரிசியில் இருந்து, பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 கிலோ கொண்ட அரிசி மூட்டை, 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு மூட்டை அரிசியில், ஆறு மூட்டை பொரி உற்பத்தி செய்யலாம். ஏழு கிலோ கொண்ட பொரி மூட்டை, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஜவுளி உற்பத்தி, சில மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொரி உற்பத்தி செலவு அதிகமானாலும், விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் விற்கப்படுகிறது. ஆயுதபூஜை படையலில் பொரி, அவல், நாட்டு சர்க்கரை, பொட்டு கடலை, நிலக்கடலை ஆகியவை இடம்பெறும். அவல், கிலோ, 60 ரூபாய், நிலக்கடலை, 120 ரூபாய், பொட்டு கடலை, 120 ரூபாய், நாட்டு சர்க்கரை, 80 ரூபாய் என விற்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.