பதிவு செய்த நாள்
18
செப்
2017
11:09
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி உண்ணாமுலையம்மை, உடனமர் அண்ணாமலையார் கோவிலில், நான்காம் ஆண்டு அறுபத்துமூவர் திருவீதி உலா, நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் திருப்பள்ளியெழுச்சி திருமுழுக்குடன் சிறப்பு வழிபாடு நடந்தது. மக்கள் தங்கள் கரங்களால், நால்வர் பெருமக்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, அறுபத்து மூன்று நாயன்மார், தொகையடியார் ஒன்பது பேர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்றிருந்த திருத்தேர் வீதி உலா துவங்கியது. இதில் மகளிர் அணியினர், சீருடை அணிந்து கோலாட்டம் ஆடிப்பாடி சென்றனர். திருத்தொண்டர்கள், திருக்கைலாய இசைக்கருவிகளை முழங்கியபடி, பங்கேற்றனர். அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, இரவு, 9:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. பின் பள்ளியறை வழிபாடும், 9:30க்கு அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் வழிபாட்டு குழுவினர் செய்தனர்.