பதிவு செய்த நாள்
21
செப்
2017
11:09
கோவை: சொட்ட சொட்ட மழையில் கோவையே சில்லென நனைந்து கொண்டிருக்க, சத்தமேயில்லாமல் ஒரு கூட்டம் தசரா பண்டிகைக்கு தயாராகி வருகிறது. அம்மனுக்கு உகந்த ராம்லீலா, துர்கா பூஜை, தசரா என அழைக்கப்படும் நவராத்திரி திருவிழா நேற்று துவங்கியது. அழகழகான பொம்மைகளை அடுக்கி கொலு அமைத்து, ஒன்பது நாட்களுக்கு வழிபாடு நடுத்துவதோடு, நம்மூரில் நவராத்திரி விழா முடிந்து விடும். இறுதிநாளை விஜயதசமியாக கொண்டாடி மகிழ்வோம். ஆனால், எதையும் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடும் வடமாநிலத்தவர்கள், நவராத்திரியை கொண்டாடும் விதமே சுவாரசியம்தான்.
ஆர்.எஸ்.புரம்., லேடீஸ் சர்க்கிள் அசோசியேஷனில் மூன்று வயது குட்டீஸ்கள் துவங்கி, அனைவரும், தசரா பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்து விரைந்து சென்றோம்... இதயத்தை தைக்கும் இசையில், ரங்கோலிகளை ஆடைகளில் தெறிக்க விட்டது போல், வண்ண நட்சத்திரங்கள் தேவதை வடிவில் நடனமாடிக் கொண்டிருந்தன. தாளம் கூட கூட, சுழலும் வேகம் அதிகரிக்கிறது. இதற்கிடையில், நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார் நடன ஒருங்கிணைப்பாளர் மேகா.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை... டில்லியிலிருந்து இங்கே செட்டிலாகி, 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆரம்பத்தில் வடமாநில திருவிழாக்களை இங்கே கொண்டாடுவது சிரமமாக இருந்தது. அதன்பிறகு இங்கேயே கொண்டாடக் கற்றுக்கொண்டோம். குறிப்பாக நவராத்திரி எனும் தசரா பண்டிகையில், பாரம்பரிய நடனமான கர்பா, தாண்டியா மிகவும் முக்கியமானது. குழுவாக சேர்ந்து, பாரபட்சம் இல்லாமல் நடமாடுவோம். இதற்காவே கோவையில் உள்ள வட மாநிலத்தவர்களை திரட்டினோம். இப்படி துவங்கியதுதான் லேடீஸ் சர்க்கிள் கிளப். இங்குள்ளவர்களுக்கு முறையான தாண்டியா, கர்பா பயிற்சி அளித்து, திருவிழாக்களை ஒன்றாக கூடி கொண்டாடுகிறோம். குட்டீஸ்கள் முதல் முதியவர்கள் வரை, அனைத்து வயதினரும் பாரபட்சமின்றி கலந்துகொள்வர். இந்த பத்து நாள் கொண்டாட்டத்துக்காக, ஆண்டு முழுவதும் ஆவலோடு காத்திருப்போம். இந்த நாட்களில் வழிபாடு, விருந்து, நடனம், இசை, உறவினர், நண்பர்களின் சந்திப்பு என சந்தோஷம், கரை புரண்டோடும். இறுதி நாளில், எங்களது மண்ணின் பாரம்பரிய இசைக்கேற்ப, தலைமுறை பேதமின்றி எல்லாரும் இணைந்து ஆடுவதில்தான் உள்ளது எங்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி!