பதிவு செய்த நாள்
17
அக்
2017
10:10
அவிநாசி: அவிநாசியில், பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவ விழாவில், திடீரென, ஒன்றரை அடி நீள குட்டி நாகப்பாம்பு, படமெடுத்து ஆடியது; விடிய விடிய காத்திருந்த நாகத்தை பார்த்து, பக்தர்கள் பரவசமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், சங்கமாங்குளம் அருகே, ஸ்ரீனிவாச பெருமாள், வீரமாத்தி அம்மன், கன்னிமார், கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி கடைசி சனி கிழமையான, 14ம் தேதி மாலை, திருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்கள், தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கோவிலுக்குள்,ஒன்றரை அடி நீளமுள்ள குட்டி நாகம் ஒன்று தென்பட்டது.
கருவறை வாயில் முன், பக்தர்களை நோக்கி படமெடுத்து ஆடியது. இதை கண்ட பக்தர்கள், மெய்சிலிர்த்தனர். பாம்பு, அங்கிருந்து நகராமல் விடிய, விடிய கருவறை வாசலிலேயே இருந்தது. நேற்று முன்தினம் காலை, கோவில் நடை திறந்த போது, நாகப்பாம்பு அதே இடத்தில் இருப்பதை கண்டு, கோவில் நிர்வாகத்தினர் ஆச்சரியப்பட்டனர். பாம்பை விரட்டும் முயற்சி, தோல்வியில் முடிந்தது. பாம்பை பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.