பதிவு செய்த நாள்
17
அக்
2017
10:10
சீரகாபாடி: சேலம், சீரகாபாடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாள் கோவில் புரட்டாசி தேரோட்ட விழாவையொட்டி, திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையன்று, கோவிலில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. கடந்த, 13ல் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத காவகிரி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பக்தர்கள் வெள்ளத்தில் வடம் பிடித்து இழுத்து வந்து நிலை சேர்ந்தது. நேற்று உலக நன்மைக்காக நடந்த, திருவிளக்கு பூஜையில், சீரகாபாடி, அரியானூர், வீரபாண்டி சுற்றுவட்டாரங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையையொட்டி, மலைமேல் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.