பதிவு செய்த நாள்
26
அக்
2017
12:10
திண்டுக்கல், திண்டுக்கல்லில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு பானைகள், பாத்திரங்கள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருள், பரிசு பொருட்கள், கார்த்திகை விளக்குகளை மண்ணால் செய்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கார்த்திகை தீப திருநாளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகல் விளக்கு ரூ.1, பெரிய அகல் விளக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது. வெளி மாவட்டம், மாநில விற்பனையாளர்கள் தேவையான விளக்குகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, வெவ்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
புதிய டிசைன்கள்: களி மண்ணால் செய்யப்பட்ட மனை விளக்கு ரூ.120, வர்ணம் பூசியது ரூ.200, பெரிய மனை விளக்கு ரூ.500, உருளி விளக்கு ரூ.150, சாமி சிலை வைத்த உருளி விளக்கு ரூ.200, 5 விளக்குகள் கொண்ட தாமரை விளக்கு ரூ.100 என புதிய டிசைன்களில் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. வியாபாரி ஒருவர் கூறுகையில், மண்ணால் செய்யப்படும் பொருட்களின் செய்கூலி, விற்கும் விலையை விட அதிகம். ஆனாலும், மக்கள் மத்தியில் மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு வரவேற்பு இருப்பதால், இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம். மண் பாண்ட கலையும், தொழிலும் அழியாமல் இருக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.