பதிவு செய்த நாள்
26
அக்
2017
12:10
சென்னிமலை: சென்னிமலை, மலை மீது கோவில் கொண்டுள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு நடந்த, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டுகளித்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, மலை மீது அமைந்து அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 20ல், துவங்கியது. அன்று காலை, 8:00 மணிக்கு சென்னிமலை கிழக்கு ரத வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி, மலை கோவிலை அடைந்தது. தொடர்ந்து நேற்று மதியம் வரை, ஐந்து நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8:30 மணிக்கு சிறப்பு வாண வேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி தொடங்கியது. சென்னிமலை, நான்கு ராஜ வீதிகளில் நடந்த சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதம், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதம், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார். இன்று காலை, 11:00 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார், தலைமை எழுத்தர் ராஜீ, தலைமை குருக்கள் ராமநாதசிவம் ஆகியோர் செய்தனர்.
* பெருந்துறை, புதிய பஸ் ஸ்டாண்ட், சோழீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இன்று மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
* கோபி, பச்சமலை முருகன் கோவிலில், சூரனை, முருக பெருமான் வதம் செய்தார். கோபி பச்சமலை ரோடு, மேட்டுவலவு, புதுப்பாளையம், ஆகிய இடங்களில், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலிலும், சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி, முத்துக்குமரன் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், சுவாமி ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், சூரபத்மனின் மூன்று அவதாரங்களையும், முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், இரவு, 9:00 மணிக்கு காமாட்சியம்மன் கோவில் மைதானத்தில், தனது சுயரூபத்துடன் போர்புரிய வந்த சூரபத்மனை முருகப்பெருமான், வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில், மாமரமாக உருவெடுத்து வந்த சூரபத்மனை, முருகப்பெருமான், சேவலாகவும், மயிலாகவும் உருமாற செய்தார்.
* தாராபுரம், சுப்பிரமணியசாமி கோவிலில், நேற்று மாலை சக்திவேலுக்கு பூஜைகள் செய்து, தீபாராதனை செய்தனர். பார்வதி தேவியிடம், வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற சூரசம்ஹாரம் ஊர்வலத்தில் சூரனை, சுப்பிரமணியர் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது. இரவு, 8:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடிவாரத்தில் உள்ள, நான்கு வீதிகளில் நடந்த போரில் சூரனை, சுப்பிரமணியன் வதம் செய்தார். இத போல, காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள, காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று, சூரன் தலையை வெட்டி முருகன் வதம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.