பக்தர்களால் பகவான் என்றே அழைக்கப்பட்டு ஜீவமுக்தியடைந்த சாய்பாபாவுக்கு உலகிலேயே முதன்முறையாக, கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில், கணுவாய் திருவள்ளுவர் நகரில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வாகதம் சாய்மந்திர் என்றழைக்கப்படும் இந்த ஆலயத்தில், மூன்றே முக்கால் அடி உயரத்தில், அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதுபோல் மார்பிளாலான அவரது திருவுருவச்சிலை காணப்படுகிறது. ஆலயத்திற்கு அருகிலேயே வேண்டுதலுக்காக பக்தர்கள் கொண்டு வரும் மட்டையுடன் கூடிய தேங்காயை எரிப்பதற்காக தூணி மண்டபம் உள்ளது. இதனருகில் நவகிரக மண்டபமும் உள்ளது. வடதிசை நுழைவாயிலை நோக்கும் விதமாக ஷீரடி சாய்பாபாவிற்கு தனிச் சன்னதியும், இடப்புறத்தில் விநாயகருக்கும் வலப்புறத்தில் லட்சுமிக்கும் தனித்தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை தரிசித்த பின்னரே சாய்பாபாவை வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு வந்து அவரை தரிசிப்பவர்களுக்கு பாபா நம்மோடு இல்லை என்ற உணர்வே ஏற்படாது. அவ்வளவு தத்ரூபமாக சிலை காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் புட்டபர்த்தியைப் போன்றே மருத்துவப் பணிகளும் அன்னதானமும் நடக்கின்றன. புட்டபர்த்தியில் அவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் கிடைக்கும் அருள், கோவையில் அவரது ஆலயத்திலும் கிடைக்கின்றது என்கிறார்கள் சாய் பக்தர்கள்.