பதிவு செய்த நாள்
09
நவ
2017
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும், 23ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏழாம் நாள் திருவிழாவான, 29ல், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், மஹாரத தேரோட்டமும் நடக்கிறது. டிச.,2ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவிற்கு முக்கிய பிரமுகர்களை அழைப்பதற்காக, 20 ஆயிரம் பத்திரிகை, சிவகாசியிலிருந்து அச்சடிக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு, நேற்று இரவு சம்பந்த விநாயகர் சந்நிதியில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சிறப்பு பூஜை செய்தனர். பின், முக்கிய பிரமுகர்களுக்கு பத்திரிகை வினியோகிக்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.