திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2017 10:12
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் மலைமேல் நாளை (டிச.,2) கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு இன்று மாலை முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலைமேலுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று காலை கங்காளநாதர் சுவாமி, நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள் புறப்பாடாகினர். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். இன்றிரவு 7:00 மணிக்கு பட்டாபிஷேகம், நாளை காலை 8:30 மணிக்கு தேரோட்டம், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். 16கால் மண்டபம் முன்பு சொக்கப்பான் தீப காட்சியும் நடக்கிறது. டிச.,3ல் சுவாமி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.