பதிவு செய்த நாள்
11
டிச
2017
02:12
கோவை;ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயண பூஜை நடந்தது.இதில், ஹரிஹரபுரம் ஸ்ரீமடம், ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாசுவாமிகள் பேசியதாவது:உலகிலேயே இந்து தர்மம்தான் பழமையானது. மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள். அதில் நரசிம்ம அவதாரம் நான்காவது. மகாபாரதத்தில் வேதவியாசர் சொல்கிறார், நரசிம்ம அவதாரம் பரம விசேஷமானது என்று. நரசிம்ம அவதாரம், பரபிரம்ம தத்துவத்தின் நேரடி சொரூபம்.
பக்தியால் மட்டுமே உணர முடியும் தத்துவம்தான், பரபிரம்ம தத்துவம். அந்த பரபிரம்ம தத்துவத்தின் சாகார சொரூபம் தான் நரசிம்ம அவதாரம். உண்மையான பக்தியோடு சுவாமியை ஆராதிக்க வேண்டும். நிஜபக்தர்களுக்கு, இக்கட்டான சூழலில், சில நிமிடங்களில் அருள் புரிவார். உண்மையான பக்தியுடன் ஆராதித்தால் பகவான் அருள் அதி சீக்கிரமாக கிடைக்கும். பகவானை ஆராதனை செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்தோத்திரம் மூலம் பகவானை ஆராதனை செய்வது விசேஷம். பாராயணம், ஹோமம், வேள்வி, அர்ச்சனை மூலம் அருள் பெறலாம். ஆனால் எல்லோராலும், வேள்வி, யாகம், யக்ஞம், அர்ச்சனை, ஹோமம் செய்ய முடியாது. அதனால் ஸ்தோத்திரம் மற்றும் பாராயணத்தின் வாயிலாக, பகவானை ஆராதனை செய்யலாம். நம் கோரிக்கைகள் பகவானை எளிதாக அடையும். அதனால் அனைவரும் ஸ்தோத்திரம் மற்றும் பாராயணத்தின் வாயிலாக, பகவானை ஆராதனை செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.