பதிவு செய்த நாள்
14
டிச
2017
12:12
திருவள்ளூர்: திருவள்ளூர் தேவி படவேட்டம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சி, பெரும்பாக்கம் கிராமம், கந்தப்பன் தெருவில், சித்தி விநாயகர், தேவி பட வேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக கோபுரம் கட்டப்பட்டு, அக். 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் வரை தினமும் மண்டலாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக நிறைவு விழா, நேற்று நடந்தது. காலை, 9:00 மணியளவில், கலச அபிஷேகமும், தொடர்ந்து, 108 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. பின், கலச நீர், அம்மன் மற்றும் விநாயகர் சிலைகளில் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.