பதிவு செய்த நாள்
14
டிச
2017
12:12
விழுப்புரம்: விழுப்புரத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், பக்தர்கள் இருமுடி பயணம் புறப்பட்டனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் வரும் ஜன., 31ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், பெண் பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையடுத்து, பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து ரயில் மூலம் மேல்மருவத்துார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். பாதயாத்திரையை, மாவட்ட தலைவர் ஜெயபாலன் துவக்கி வைத்தார். சக்திபீட தலைவர் பழனிசாமி, செயல் தலைவர் சீத்தாராமன், பொருளாளர் சண்முகம், துணை தலைவர் பார்வதி, செயலாளர் பால்ராஜ், நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.