பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
பென்னாகரம்: நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் சுவாமிக்கு, மார்கழி மாத அமாவாசையையொட்டி, நேற்று, காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வந்து, பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சந்தன மர கடத்தல் வீரப்பன் உயிருடன் இருந்த போது, இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு வந்ததால், இந்த கோவிலை, வீரப்பன் கோவில் என்றும் அழைக்கின்றனர். நேற்று, மார்கழி மாத அமாவாசை என்பதால், நெருப்பூர், ஒட்டனூர், காட்டூர், நாகமரை, பன்னவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்தனர். மாலை அணிந்து, விரதமிருந்து வந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதிகாலை, நாகமரை காவிரி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து சுவாமிக்கு பூஜை செய்து, தங்கள் விரதத்தை முடித்தனர். பின், சுவாமி சிலையை தூக்கி வந்த பக்தர்கள், கோவிலை சுற்றிலும் வலம் வந்தனர். அப்போது, கிரிவலப் பாதையில், சுவாமி சிலை தங்களை தாண்டிச் செல்லும் வகையில் பக்தர்கள் படுத்திருந்தினர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். தர்மபுரி, பென்னாகரம், மேட்டூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களின் நலனை கருதி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.