பதிவு செய்த நாள்
29
டிச
2017
12:12
கோபி: மொடச்சூர், தான்தோன்றியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுடன் துவங்கியது. அன்றுமுதல், பூ மிதிக்கும் பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்க துவங்கினர். முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்காக, நேற்று முன்தினம் மாவிளக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதையடுத்து, குண்டத்தில் குவிக்கப்பட்டிருந்த எரிக்கரும்புகளுக்கு, ஆகமவிதிப்படி நெருப்பு மூட்டினர்.குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவக்கமாக காலை, 7:20 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார். 7:40 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு, 8:00 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி மயில்சாமி, ஆகமவிதிப்படி குண்டத்துக்கு முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். கூடியிருந்த பக்தர்கள் அதை லாவகமாக பிடித்தனர். அதற்கு பின் குண்டத்தில் இருந்து, நெருப்பை இரு கைகளால் அள்ளி வீசி, பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். இதையடுத்து, சிறுவர்கள், ஆண், பெண் என மொத்தம், 5,000 பக்தர்கள் வரிசையாக, அம்மனை வணங்கியபடி, பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.