துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3): உலகமே இனி உங்கள் கையில்
பதிவு செய்த நாள்
01
ஜன 2018 11:01
நடுநிலையுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. சில ஆண்டுகளாக எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள். அதற்கு காரணம் ஏழரை சனி. தற்போது அதன் பிடியில் இருந்து பூரணமாக விடுபட்டு விட்டீர்கள். குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க கூடும். பொருட்கள் களவு போயிருக்க வாய்ப்பு உண்டு. இப்போது சனிபகவான் 3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதாரத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். உலகமே உங்கள் கையில் இருப்பது போன்ற அனுபவம் ஏற்படும்.
ஆனால் குரு உங்கள் ராசியில் இருப்பது சாதகமல்ல. இவ்வாறு இருக்கும் போது கலகம், விரோதம், மந்த நிலை ஏற்படும் என்பது பொதுபலன். எனினும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும் பிப்.14-ல் விருச்சிக ராசிக்கு மாறும் போது, அவரால் சிறப்பான பலன் கிடைக்கும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ராகு தற்போது 10-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. சிறு பொருள் இழப்பையும், உடல் நிலையில் பிரச்னையையும் கொடுப்பார். கேது 4-ம் இடமான மகரத்தில் இருக்கிறார். இதனால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாக வழியுண்டு. கவனம். இந்த ஆண்டு நன்மைகள் நடக்கும்.
திருமணம், சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் மகிழும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். மொத்தத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம். கணவன், -மனைவி அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறலாம். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். வீண் அலைச்சல் இருக்காது. சென்ற இடமெல்லாம் வெற்றி ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். நல்ல லாபம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வளம் காணலாம். பங்கு வர்த்தகம் லாபம் தரும். அரசின் உதவி கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை பெறலாம். பதவி, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள், முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் பெறுவர். அரசியல்வாதிகள், சிறப்பான நிலையில் இருப்பர். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குரு சாதகமாக இல்லாததால் எதிலும் தீவிர முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் முன்னேற்ற பலனை காணலாம். கடந்த ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள் வளர்ச்சி காண்பர். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், எள், பனை பயிர்கள் நல்ல வருமானம் தரும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை செலவை குறைப்பது நல்லது. குருவின் பார்வையால் தேவைகள் பூர்த்தியாகும். பணி செய்யும் பெண்கள் உயர்ந்த நிலை அடைவர்.
பரிகாரம்: * கேதுவுக்கு, கொள்ளு படைத்து அர்ச்சனை. * ஞாயிறன்று ராகுவுக்கு அபிஷேகம். * வெள்ளியன்று துர்க்கை வழிபாடு.செல்ல வேண்டிய தலம் நாகர்கோவில் நாகராஜா கோயில்
|