சிவனுக்குரிய கைலாயம் வடக்கில் இருந்தாலும், அவர் நடராஜராக ஆடும்போது தெற்கு திசை நோக்கியே ஆடுகிறார். இதற்கான காரணத்தை திருவிளையாடல் புராணம் சொல்கிறது. வடக்கு திசையே இறைவனுக்குரியது என்றாலும், ஆடும் போது களைப்பு உண்டாகும். சந்தன மரங்களை தழுவியபடி வீசும் பொதிகை மலையின் உச்சியில் புறப்படும் தென்றல், முகத்தில் பட்டால் களைப்பு நீங்கி புத்துணர்வு உண்டாகும். அதோடு செவிகளால் தமிழ் மொழியின் இனிமையை கேட்க வேண்டும் என்பதற்காகவும், சிவன் தெற்கு நோக்கி நடனமாடுவதாக பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார். பொதிகையின் சந்தனகாற்றையும், செந்தமிழ்பாட்டையும் சிவனே வரவேற்கிறார் என்றால், இவற்றின் பெருமையை வேறு யாரும் சொல்லவும் வேண்டுமோ?