உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் கிராமத்தில் வயல்வெளியின் நடுவில் லிங்க வடிவில் அமைந்துள்ளது. ராமர்மலை, இலங்கையில் ராவணனுடன் போர் புரிந்து கோபத்துடன் வந்த ராமர் இம்மலையில் உக்கிரக் கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதிகம். மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. பதினான்கு சித்தர்களுடன் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். கோயிலின் தல விருட்சமாக நெய்கொட்டான் மரம் உள்ளது. மரத்தின் இலைகளைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. கீழே உதிர்ந்த இலைகளை எடுத்து மீண்டும் மரத்தின் மீது போட்டு இலை அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர். பல நூற்றாண்டுகளாக மரணமில்லாமல் வாழ்ந்த சித்தர்கள் வயது முதிர்வு காரணமாக கட்டைவிரல் அளவிற்கு குறுகி விட்டதால் கட்டை விரல் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பவுர்ணமிகளில் இங்கு கிரிவலம் வந்தால் அங்கு உலாவரும் கட்டைவிரல் சித்தர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.