பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில், நேற்று அதிகாலை முதல், வீடுகளில் மக்கள் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதையொட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், மஞ்சள் குலை அலங்காரத்தில் சுந்தரவல்லி தாயார், சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், வெள்ளிக் கவச சாத்துபடியில், ராஜகணபதி காட்சியளித்தார். கடை வீதி, ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன், ராஜ அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், உத்தமசோழபுரம் கரபுரநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, மல்லூர் கோட்டைமேடு கோவிந்தராஜ பெருமாள், சுனைக்கரடு ஏகாம்பரேஸ்வரர், நத்தமேடு சிதம்பரேஸ்வரர், சூரியலிங்கேஸ்வரர், ஊத்துமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.