பதிவு செய்த நாள்
16
ஜன
2018
12:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும், 1,000 ஆண்டுகள் பழமையான பாதையில் சென்று, ஆதி விநாயகர் கோவிலில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆதி பழநி என்றழைக்கப்படும் சென்னிமலை முருகன் கோவில், பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. கோவிலுக்கு செல்ல தற்போது, மலையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலுக்கு செல்லும், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பாதை, மலையின் தென் பகுதியில் உள்ளது.
நல்லபாழி என்ற ஊரில் இருந்து வனப்பகுதியில் ஆரம்பித்து செல்கிறது. இந்த வழியாக நடந்து சென்றுதான், முன்னோர் சென்னிமலை முருகனை வழிபட்டனர். இந்த வழியில் மூன்று தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளது மிகச்சிறப்பு. ஒரு கி.மீ., வனத்தில் பழைய பாதையில் சென்றால், நடுமலை வந்துவிடும். அங்கு நடுமலை ஆண்டவர் எனப்படும், ஆதி விநாயகர் கோவில், பழங்கால கோபுரத்துடன் உள்ளது. இங்கிருந்து செல்லும் கருங்கல்லால் அமைக்கப்பட்ட பாதை, கோவிலின் தென் பகுதியை அடைகிறது. இந்த வழியை, பக்தர்கள் தற்போது பயன்படுத்துவதில்லை. தை இரண்டாம் நாளை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நடுமலை விநாயகர் கோவிலில், நேற்று வழிபாடு நடத்தினர்.