பதிவு செய்த நாள்
16
ஜன
2018
11:01
ஈரோடு: தை பூசத்திருவிழாவை முன்னிட்டு, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ஈரோடு வழியாக சாரை, சாரையாக செல்கின்றனர். தை பூசத்திருவிழாவை ஒட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க, தமிழகம் முழுவதும் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக உள்ளது. தைப்பூசம் வருவதால், தற்போது பக்தர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதில், சேலம், நாமக்கல் மாவட்ட பக்தர்கள், ஈரோடு, அறச்சலூர், காங்கேயம், தாராபுரம், வழியாக பழநி செல்கின்றனர். பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இளம்பிள்ளை, சேலம், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமி, பெரியவர்கள், ஈரோடு வழியாக நேற்று சாரை சாரையாக பயணித்தனர். அதில், பலர் பால் காவடி, பன்னீர் காவடி, மயில்காவடி, இளநீர் காவடி, திருநீர்காவடி சுமந்து சென்றனர். இவர்களுக்கு குடிநீர், மோர், உணவு என, வழி நெடுகிலும், பலர் பந்தல் அமைத்து வழங்குகின்றனர். அதேசமயம் ஈரோடு வழியாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக, நடமாடும் கழிவறை, நடமாடும் மருத்துவக்குழு உள்ளிட்ட வசதிகள் செய்து தர, பாதயாத்திரை குழு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.