பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
சென்னை: இந்து ஆன்மிக கண்காட்சி துவக்கத்தின் முன்னோட்டமாக, விவேகானந்தரின் ரத யாத்திரை உற்சவம், மயிலாப்பூரில் நேற்று துவங்கியது. இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில், ஜனவரி, 24 முதல், 29 வரை நடத்துகின்றன. இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில், பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன், விவேகானந்தர் ரத யாத்திரை பூஜை நடந்தது. நேற்று மாலை, பூஜை செய்யப்பட்ட, 24 ரதங்களில், விவேகானந்தர் சிலை மற்றும் அவரது போதனைகள் இடம் பெற்றிருந்தன. இந்த ரதங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, 1,000 அரசு மற்று தனியார் பள்ளிகளுக்கு சென்று, லட்சக்கணக்கான மாணவ - மாணவியரை சந்தித்து, விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப உள்ளன. ரத யாத்திரையின் போது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளன.