பதிவு செய்த நாள்
23
ஜன
2018
12:01
திருப்பூர்: முருகம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது.திருப்பூர் முருகம்பாளையத்தில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 20ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தீர்த்தம் அழைத்தல், முளைப்பாலிகை அழைத்தலை தொடர்ந்து, முதல் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக பூஜைகள், 108 அர்ச்சனை, ஹோமங்களும் நடைபெற்றன. மாலை, மூன்றாம் கால யாக பூஜைகள், 1,008 அர்ச்சனை, ஹோமங்கள் நடைபெற்றன. இரவு, கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு, மங்கள இசை, யாக பூஜைகள், அதை தொடர்ந்து கிழக்கு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், 6:00 மணிக்கு நடைபெற்றது. நேற்று, 7:00 மணிக்கு, ஸ்ரீ மாரியம்மன் கோவில் யாக பூஜை; 9:00 மணிக்கு, மாரியம்மன் கோவில் விமான கோபுரங்களுக்கு, 9:15 மணிக்கும்; ஸ்ரீ விநாயகருக்கும், 9:30 மணிக்கு முருகபெருமானுக்கும்; 9:45 மணிக்கு, ஸ்ரீ மாரியம்மனுக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வர சுவாமி கோவில் ராஜப்பா குருக்கள் தலைமையில், திருப்பூர் ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் ஸ்ரீதர் குருக்கள் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, பரிவாரங்கள் கும்பாபிஷேகம்; மஹா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். "நலம் அமைப்பு மற்றும் சேக்கிழார் பேரவையினர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.