பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகே, இரு கிராமங்களின் கோவில்களில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலை புதுப்பிக்க கிராமத்தினர் முடிவு செய்ததை தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை, 9.30 மணிக்கு நடந்தது.இதை ஒட்டி, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, யாகசாலை பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடந்தன. நேற்று காலை கலச குடங்கள் புறப்பாடுடன், கோவில் விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். அதுபோல, திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலிலும், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 9:30 மணிக்கு விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, இரவு அம்மன் வீதி உலா புறப்பாடும் நடந்தது.