பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
வடலுார்: வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா, நடைபெறுகிறது. கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று சன்மார்க்க கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, கடந்த 23 முதல் 25ம் தேதி வரை, தருமசாலையில் மகாமந்திரம் ஓதுதல், 26 முதல் 29ம் தேதி வரை, ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு, அருட்பெருஞ்ஜோதி அகவற்பாராயணம், 7:30 மணிக்கு தருமசாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. நாளை, 31ம் தேதி,காலை 6:00 மணி, 10:00; மதியம் 1:00; இரவு 7:00; 10:00 மணி, மறுநாள் 1ம் தேதி அதிகாலை 5:30 மணி என, ஆறு காலங்கள், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.வரும், 2ம் தேதி, காலை 10:00 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் சென்று, அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து, மதியம் 12:00 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டு, தரிசனம் நடைபெறும்.