பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மகா சிவராத்திரி விழா, நேற்றிரவு களை கட்டியது. சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள், விடிய விடிய வழிபாடு செய்தனர். ஆயுள் காலம் முடிந்த, மார்கண்டேயனை பிடித்து செல்ல, எமன் துரத்தினான். அப்போது மார்கண்டேயன் சிவலிங்கத்தை பற்றி, உயிர் பிழைத்தான். சிவராத்திரியில் அந்நிகழ்ச்சி நடந்ததால், சிவரத்திரியில் கண் விழித்து, சிவனை வழிபட்டால், எம பயம் விலகி, இடர்கள் விலகும். நீண்ட ஆயுள், நிறை செல்வம், மெய்ஞானம் பெறலாம். இந்நிலையில், நேற்றிரவு சிவராத்திரி விழா, சிவன் கோவில்களில் கொண்டாடப்பட்டது இதையொட்டி, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், இரவு, 7:00 மணிக்கு, முதல்கால பூஜை, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 1:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் காலை, 6:00 மணிக்கு நடந்த, நான்காம் கால பூஜையில் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவன்மலை சந்திரசேகர ஓதுவார்கள் குழுவினரின், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
* சிவராத்திரியை ஒட்டி, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், 12 பெண்கள் கலந்து கொண்டு பரதமாடினர். இதை தொடர்ந்து நடந்த நான்கு கால பூஜைகளில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகிரி வேலாயுதசாமி கோவிலில், 1,008 சிவலிங்க பூஜை நடந்தது.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடந்தது. பிரதோஷ விழா முடிந்து, சிவராத்திரி விழா தொடங்கியது. முதற்கால பூஜை இரவு, 8:00 மணி, இரண்டாம் கால பூஜை, 10:00 மணி, மூன்றாம் கால பூஜை, நள்ளிரவு, 2:00 மணி, நான்காம் கால பூஜை, 4:00 மணிக்கும் நடந்தது. பவானி, காளிங்கராயன்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.