பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
திருப்பூர்: பிரசித்தி பெற்ற, பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, அடுத்த மாதம், 3ம் தேதி நடக்கிறது. முதல் நிகழ்வாக,அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது.திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், பிரசித்த பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் காவல் தெய்வமாக, பக்தர்கள் வழிபடப்படும் இக்கோவிலில், அமாவாசை, வெள்ளிக்கிழமை, விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசித்து செல்வர். ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை, கோவிலில் குண்டம் திருவிழா நடக்கும். சகுனம் கேட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்நிகழ்வில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர்.
நடப்பு ஆண்டு குண்டம் திருவிழாவுக்கான ஆயக்கால் நடுதல், தேர் முகூர்த்தத்துடன் இம்மாதம், 23ம் தேதி துவங்குகிறது. அதை தொடர்ந்து, வரும், 28ல் கொடியேற்றம்; ஏப்ரல், 1ல் பொங்கல் விழா நடக்கிறது. ஏப்ரல் 3ம் தேதி, கோவில் குண்டம் திருவிழா நடக்கிறது. குண்டம் விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நாளை (6ம் தேதி) அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.