பதிவு செய்த நாள்
22
மார்
2018
02:03
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் வழியில், கடைகளின் ஆக்கிரமிப்பால், கோவிலுக்கு செல்லவும், வாகனங்களை பார்க்கிங் செய்யவும் பக்தர்கள் திண்டாட வேண்டியுள்ளது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகும். தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில், பிற மாவட்ட பக்தர்கள் அதிகம் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேங்காய், சூடம், அம்மனுக்கு சாற்றப்படும் சேலைகள் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்ய, கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், கோவில் வளாகத்துக்கு அருகிலுள்ள, பத்து கடைகள் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மீதமுள்ள கடைகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானதாகும். இந்நிலையில், கோவிலுக்குச் செல்லும் வழியில் கோவில் வளாகத்துக்கு அருகிலுள்ள வியாபாரிகள் கடைகளை ரோட்டின் பாதிவரை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர். மேலும், பூஜை பொருட்கள் வாங்கவரும் பக்தர்களை, தங்கள் கடைகளுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். இதனால், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், நடப்பதற்கு கூட இடமின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, கோவிலுக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை கடந்து, பார்க்கிங் பகுதிக்கு செல்வதற்குள், இடநெருக்கடியால் திண்டாடுகின்றனர்.இது குறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், வணிகக் கடைகள் தனியார் இடத்தில் உள்ளது, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பதில் அளித்து விட்டு, ஒதுங்கி கொள்கின்றனர். இத்தகைய தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆசியுடன் செயல்படுவதால், ஆனைமலை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், இட நெருக்கடியால் சிரமப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வணிகக் கடைகளின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.