பதிவு செய்த நாள்
22
மார்
2018
02:03
வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவில் மயிலை மீட்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முருகன் கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன், அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்தில், 30 ஆண்டுகளாக, கூண்டில் மயில்கள் வளர்க்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில், கோவிலுக்கு சென்ற வனத்துறையினர், கூண்டில் அடைத்து மயிலை வளர்க்கக் கூடாது என கூறி, மூன்று மயில்களை பறிமுதல் செய்து, வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒப்படைந்தனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானின் வாகனமான மயில்களை காணாமல் ஏமாற்றம் அடைகின்றனர். கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, மயில்களை மீட்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தனர்.