ஒரு ஆட்டுக்கிடைக்குள் வாசல் வழியாக வராமல், வேறுவழியாக வருகிறவன் திருடன் என்று புரிந்து கொள்ளும் ஆடுகள், சத்தம் போட்டு மேய்ப்பவனை உஷார்படுத்துகின்றன. வாசல் வழியாய் வருகிறவனை தங்கள் மேய்ப்பன் என நம்பி அவன் பின்னால் செல்கின்றன. இதனடிப்படையில் பைபிளில் இயேசு சொல்வதைக் கேளுங்கள்.
“நானே வாசல். என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் ரட்சிக்கப்படுவான். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பன் அல்லாதவனும், ஆடுகளுக்கு சொந்தக் காரனும் அல்லாத கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப் போகிறான். அப்பொழுது ஓநாய் விரட்டி அவைகளை சிதறடிக்கும். இந்த தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல், வேறு ஆடுகளும் எனக்குண்டு. அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். என் ஆடுகள் (மக்கள்) என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது,” என்கிறார். இதன்மூலம் தனது போதனைகளை கடைபிடிக்கவும், கடவுளிடம் விசுவாசமாக இருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், நல்லதை செய்யவும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்.