பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, 23 கிராமங்களில், முயல் வேட்டை எனும் வினோத திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.பெரம்பலுார் மாவட்டத்தில், எசனை, துறைமங்கலம் உள்ளிட்ட, 23 கிராமங்களில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், முதல் ஞாயிற்று கிழமையில், முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு நடப்பது வழக்கம்.இதன்படி நேற்று, அனைத்து கிராமங்களிலும், இந்த வினோத வழிபாடு நடந்தது. வீட்டுக்கு ஒருவர் வீதம், நேற்று காலை, மேற்கண்ட கிராம கோவில்களில் கூடி, சிறப்பு பூஜைகள் செய்து, வேட்டைக்கு சென்றனர். மாலை, 4:00 மணி வரை வேட்டையில் ஈடுபட்டு, வேட்டையாடிய முயல்களுடன், குறிப்பிட்ட பகுதியில் மாலையில் கூடினர்.வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்து, அங்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, வேட்டையாடிய முயல்களை, குச்சிகளில் தோரணம் போல் தொங்க விட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடுகளை, சாமிக்கு பலி கொடுத்து, படையல் செய்தனர். முயல் மற்றும் ஆடுகளின் கறி, பங்கு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.