பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
12:04
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம், சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து மணக்கோலத்தில் தம்பதியர், வீதியுலா எழுந்தருளினர். ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், திங்கட்கிழமை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, சுபத்திரை திருக்கல்யாணமும் நடந்தது. கிருஷ்ண பகவான், பலராமரின் சகோதரியான சுபத்திரையை அர்ச்சுனன், மணம் முடித்தார்.
இந்த மகாபாரத நிகழ்வு, கோவில் வளாகத்தில், கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த திருமண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின், மணக்கோலத்தில், அர்ச்சுனன் - சுபத்திரை தம்பதியினர், வீதியுலா எழுந்தருளினர். வீடுதோறும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து, வழிபட்டனர். திருவிழாவின் அடுத்த சிறப்பு நிகழ்ச்சியாக, நாளை இரவு, அலகு பானை ஊர்வலம் நடைபெற உள்ளது. சக்தி வாய்ந்த இந்த ஊர்வலத்தில் பங்கேற்க, திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும், நாளை, பலரும் புதிதாக விரதத்தை ஏற்க காத்திருக்கின்றனர். வரும், ஞாயிற்றுக்கிழமை மாலை, உச்சக்கட்ட நிகழ்ச்சியாக, அக்னி பிரவேசம் நடைபெற உள்ளது.