சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை தினமான அட்சய திரிதியை அன்று, பவானி அருள்மிகு சங்கமேஸ்வாரைத் தரிசித்து வழிபடுவது விசேஷம். அத்துடன், இந்த தினத்தில் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் நீராடுவதால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும்; வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அருகிலுள்ள தலம் திருக்கோளூர். இந்தத் தலத்தின் பெருமாள் ‘மரக்கால்’ எனும் அளவைப் பாத்திரத்தால் குபேரனுக்கு செல்வங்களை அளந்துகொடுத்தாராம். அவர், அந்த மரக்காலையே தனது தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். இவரை, வைத்தமாநிதி பெருமாளாகிய இவரை, அட்சய திரிதியை அன்று தரிசித்து வழிபடுவதால், செல்வ வளம் பெருகும்.
திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் ‘சித்திரைத் தேர்’ திருநாளை விருப்பண்ணத் திருநாள் என்று சிறப்பிக்கிறார்கள். அந்நிய படையெடுப்பின்போது ரங்கநாதரின் விக்கிரகம் மறைத்துவைக்கப்பட்டது. அதனால் தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், ‘விருப்பண்ண உடையார் ’ என்ற நாயக்க அரசரது நடவடிக்கையால் மீண்டும் தேர்த்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி அவரது பெயராலும் சிறப்பிக்கப்படுகிறது இந்தத் திருவிழா. சென்னைக்கு அருகிலுள்ள பொன்னேரியில், அகஸ்தீஸ்வரர் கோயிலும், கரிகிருஷ்ண பெருமாள் கோயிலும் உள்ளன. சித்திரை முதல் நாளன்று ஹரிஹரன் பஜார் என்ற இடத்தில் ஹரியும், ஹரனும் சந்திக்கும் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.