பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
10:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜரின், 1,001ம் ஆண்டு திருஅவதார விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு சித்திரை, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகன் ராமானுஜர்.அவரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு ராமானுஜரின், 1001ம் ஆண்டு திருஅவதார உற்சவ விழா, ஏப்., 12ல் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், ராமானுஜர் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று திருத்தேர் விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிலையத்தில் இருந்து ராமானுஜர், தேரில் புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று, நிலையத்தை அடைந்தது.விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவில், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா சென்ற ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.