பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
10:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அப்போது, உற்சவர் முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் எதிரே வந்து, எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், கொடிமரத்தில், கொடியேற்றம் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, திருத்தணி முருகன் திருவடி சபையின் சார்பில், பரத நாட்டியம், குச்சிப்பூடி நடன நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு, வெள்ளி சூர்ய பிரபையிலும், இரவு, 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா செல்கிறார். வரும், 30ம் தேதி வரை, தினமும் காலை, இரவு நேரங்களில், ஒவ்வொரு வாகனத்தில், வீதியுலா செல்வார். இம்மாதம், 27ம் தேதி, குதிரை வாகனம் மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்கின்றனர்.