பதிவு செய்த நாள்
04
மே
2018
11:05
திருவண்ணாமலை:கிரிவலப்பாதையில் உள்ள மரங்களில், மீண்டும் அமிலம் ஊற்றியது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 1,115 மரங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன், மர்ம நபர்கள், 62 மரங்களில் துளையிட்டு, அமிலம் ஊற்றியதில், 56 மரங்கள் பட்டுப்போனது. 6 மரங்களை அதிகாரிகள் காப்பாற்றினர். பட்டுப்போன மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகள் நடும் பணிகள் நடக்கின்றன. கிரிவலப்பாதையில், சோனாநதி பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட மரங்களில், மர்மநபர்கள் துளை போட்டு, மீண்டும் அமிலம் ஊற்றியுள்ளனர். அந்த, மரத்துளைகளில் இருந்து, அமிலம் பொங்கி வழிந்தது குறித்து, அவ்வழியாக சென்றவர்கள், நேற்று அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்கள், அமிலம் வந்த, மரப்பட்டைகளை எடுத்துச்சென்று, ஆய்வு செய்து வருகின்றனர்.