பதிவு செய்த நாள்
13
ஜூன்
2018
01:06
நெட்டப்பாக்கம்;பண்டசோழநல்லுார் சிவன் கோவில் எதிரில் உள்ள குளத்தை துார் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார் கிராமத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.இந்த குளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் சேகரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்த குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் கழிவு நீர் விடப்பட்டு வருகிறது. இதனால் குளம் முழுவதும் அசுத்தமாகி, புற்கள், செடிகள் வளர்ந்து துார்ந்து போய் விட்டது.மேலும், குளத்திற்கு வரும் கழிவு நீர், வீடுகளில் புகுந்து வந்தது.இதுகுறித்து பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து பொதுமக்களே கழிவு நீர் செல்லும் வழியில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் துார் வாரினர். இந்த குளத்தில் மழை நீர் சேகரிக்கும் நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் கழிவு நீர் அனைத்தும் மலட்டாறு பகுதிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடிக்கால் வாய்க்கால் பணி முடிந்தும், கழிவுநீர் கோவில் குளத்தில் விடப்படுகிறது. வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் செல்லும் வகையில் இணைப்பை ஏற்படுத்தி தர , பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.