மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருவோர் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கோவில் வளாகத்தில் பயன்படுத்தக் கூடாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், 50க்கும் மேற்பட்ட விருந்து மண்டபங்கள் உள்ளன. இங்கு வருவோர் கேரி பேக்குகளை பயன்பாடு முடிந்ததும் கோவில் வளாகத்தில் போட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அரசு தடை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கோவில் வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.