பதிவு செய்த நாள்
24
ஆக
2018
10:08
சபரிமலை : ஓணம் பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. பாதைகளை சீரமைக்கும் வரை, பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என, கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதால், பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறைபுத்தரிசி, ஆவணி மாத பூஜைகளுக்கு பக்தர்கள் இங்கு செல்ல முடியவில்லை. இதனால், ஓணம் பூஜைகளின் போது, பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. பம்பை செல்வதற்கான மாற்றுப் பாதை உள்ளிட்ட விபரங்களை, தேவசம் போர்டு வெளியிட்டது.
ஆனால், கேரள உயர் நீதிமன்றம், இதற்கு அனுமதி மறுத்து விட்டது. சாலைகளை சரி செய்யும் வரை, சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என, தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.இதன் படி, ஓணம் பூஜை களுக்கு, பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்தார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல், 27 வரை, ஓண பூஜைகளும், வழக்கமான பூஜைகளும் நடக்கும். 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் பூஜாரிகளும், குறைந்த அளவு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், சரண கோஷ முழக்கம் இல்லாமல், சபரிமலை அமைதியாக காணப்படுகிறது.அடுத்ததாக, புரட்டாசி மாத பூஜைகளுக்காக, செப்., 16ல், கோவில் திறக்கப்படும். அதற்கு முன், பம்பையில் தேவை யான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதற்காக, வரும், 28ல், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அனைத்து துறை அதி காரிகளின் கூட்டம் நடத்தப்பட உள்ளது, பம்பையை சீரமைக்க, 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் துவங்குவதற்கு, 83 நாட்கள் மட்டுமே உள்ளதால், தேவசம்போர்டு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.