தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி, வளர்பிறை சதுர்த்தி போல தனக்கும் பெருமை வேண்டும் என விநாயகரை வேண்டினாள். அப்போது விநாயகர் “தேவி! சந்திர உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும், சந்திரோதயமும் கூடிய இந்தக் காலம் சிறப்பு மிக்கதாகும். என்னை வழிபடுவோருக்கு சங்கடங்களை எல்லாம் நீக்குவேன்” என்று அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது ’துன்பம் போக்கும் சதுர்த்தி’ என்பது இதன் பொருள். சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் மாலை வரை தண்ணீர், பழச்சாறு சாப்பிடலாம். மாலையில் சந்திரனை பார்த்த பின்னர் விநாயகரை வழிபட்டு விநாயகர் 108 போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் விரதம் முடிக்க வேண்டும்.
இந்த விரதமிருந்த கிருதவீர்யன் என்னும் மன்னன் கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றான். புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கப் பெற்றார். ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பவர்களுக்கு கடன், நோய், எதிரி தொல்லை உண்டாகும். தேய்பிறை சதுர்த்தியும், செவ்வாய் கிழமையும் இணையும் நாளில் விரதமிருந்தால் தோஷம் நீங்கும். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் மகா சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் கவலை பறந்தோடும். மகிழ்ச்சி நிலைக்கும்.