ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கிணற்றில் நீர் குறைந்து வறண்டு வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த இரு ஆண்டுகளாக ராமேஸ்வரம், பாம்பன் தீவு பகுதியில் பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குளம், கிணறுகளில் நீர் வற்றியது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தக்குளம், கிணற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நீராட முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இந்நிலையில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், 20 அடி ஆழ கிணறுக்குள் இறங்கி நீர் ஊற்று துளையில் அடைத்துள்ள மணலை அகற்றி தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கிணற்றில் ஓரளவுக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் நெரிசலை சமாளிக்க, பக்தர்களுக்கு புனித நீரை தெளித்து விடும் நிலை தான் உள்ளது.